Friday 26 February 2016

Digestion-How- Homeopathic

#வயிறே #நம் #வாழ்விற்கு #ஆதாரம் !!!

#வயிறே #நம் #வாழ்விற்கு #ஆதாரம்!!!
******************************************

பகுதி – 1
-------------

உடல் நலத்திற்கு ஆதாரமாக விளங்கும்
வயிற்றை நாம் எப்படி கையாளுகிறோம் என்று
தெரியுமா?

உண்மை தெரிந்தால் நாம் அதிர்ச்சியடைவோம்.
உண்மையில் நாம் நம் வயிற்றை ஒரு குப்பைத்
தொட்டியாகத்தான் பயன்படுத்துகிறோம்.

நம் உடலுக்கு வேண்டிய சத்தும் சக்தியும்
வயிறு வழிதான் கிடைக்க முடியும் என்று
தெரிந்திருந்தும் அதனை நாம்
பொருட்படுத்துவதே இல்லை.

நம் உணவில் சத்து இருக்கிறதா?
சக்தியிருக்கிறதா? என்றெல்லாம் நாம் பார்த்து
சாப்பிடுவதில்லை. நாக்கு உணர்வுக்கு ஒத்து
வருகிறதா என்று மட்டுமே பார்க்க
ஆரம்பித்துவிட்டோம்.

இதன் பயனாய் நம் வயிற்றில் உருவாகும்
உபாதைகள் யாவும் நம் உடல் முழுமைக்கும்
எண்ணிலடங்கா வகை வகையான நோய்களாக
தோன்ற வழியாகிவிடுகின்றன.

அதேபோல் நமக்கு உண்மையான பசி
ஏற்படுகிறதா அல்லது வயிற்று அல்சர்
எரிச்சலைத்தான் பசி என்று நினைத்துக்
கொள்கிறோமா என்று தெரிந்து கொள்வது
மிகவும் முக்கியம்.

அல்சர் எரிச்சலை பசி என்று நினைத்து
அடிக்கடியும் அதிகமாகவும் சாப்பிட்டால் நாம்
மேலும் இரணமாகும் வாய்ப்பு அதிகமாகும்.
இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம்
அறியாமல் இருக்கிறோம்.

நம் செரிமான மண்டலத்திற்கும் உள் நாக்கு,
உதடு மற்றும் கண்களுக்கும் உள்ள அற்புத
தொடர்பினை நாம் எப்பொழுது
தெரிந்துகொள்வது?.
கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்
செய்யமுடியுமா?

நாம் நம் உள்நாக்கு, பித்தப்பை, குடல் வால்
மற்றும் கருப்பை ஆகியவற்றை இழக்காமல்
காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?

இவ்வுறுப்புகளை இழப்பதன் மூலம் நாம்
எவ்வாறு வாழ்நாள் முழுவதும்
பாதிப்புகளுக்கு ஆளாகிறோம் என்பது
தங்களுக்கு தெரியுமா?.

நாம் இளமையாக தெரிவதற்கு நம் நரை
முடிக்கு கருப்புக் கரை அடிக்கிறோம்.
பொய்யாக நடிக்கின்றோம்.
ஆனால் உண்மையிலேயே இளமையாக நம்மை
மாற்றிக்கொள்ள தெரியாமல் இருக்கின்றோம்.

இந்தக் கொடுமையெல்லாம் நம் உள்ளே
நடைபெறா வண்ணம் இருக்க வேண்டுமாயின்
இனி வரும் பதிவுகளை படித்து தாங்கள்
தங்களையும், தங்கள் வாழ்க்கையையும்
மாற்றிக்கொள்வது நிச்சயம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என்பதனை உணர்வதும் சாத்தியம்!.

#வயிறே #நீ #வாழ்க!
**************************
நாம் நல்ல உணவை நல்ல விதமாக
சாப்பிட்டால், அது, நம் வயிற்றில் நான்கு மணி
நேரம் தரமாகச் செரித்து, பின் நம் சிறுகுடலில்
சிறப்பாக கிரகிக்கப்படுகிறது. நாம்
அரோக்கியமாக வாழ வயிற்றுச் செரிமானமும்,
சிறுகுடல் சத்து கிரகிப்பும் அவசியம் தேவை.

ஒரு சிலருக்கு செரிமான சக்தி அதிகமிருந்து
சிறுகுடல் சத்து கிரகிப்பு குறைவாகவும்,
வேறு சிலருக்கு செரிமானம் சுமாராக இருந்து
சத்து கிரகிப்பு அதிகமாக இருக்கவும், வேறு
சிலருக்கு இந்த இரண்டுமே சரியில்லாமல்
போகவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த இரண்டு நிலைகளில் எங்கு எப்படிப்
பிரச்சனை நிகழ்ந்தாலும் நாம் சாப்பிட்ட
உணவானது பயன்படாமல் கழிவாக அதாவது
மலமாக மாறி மலச் சிக்கலுக்கு இட்டுச்
செல்கிறது.

இந்த மலச் சிக்கல்தான் நம் எல்லா
நோய்களுக்கும் தொடக்கமாக அமைகிறது.

இதைதான் நம் முன்னோர்கள் “மலச்
சிக்கல்தான் ஆதி நோய் மற்றவை எல்லாம் மீதி
நோய்” என்று கூறியுள்ளனர்.

அன்பு நண்பர்களே! நாம் சாப்பிட்ட உணவானது
வயிற்றில் இரசமாகி, சிறுகுடல் வழியாக
இரத்தத்தில் கலந்து, சதைக்குச் சத்தும்
சக்தியும் அளித்து, அதன் தொடர்ச்சியாக
கொழுப்பில் கொஞ்சம் சேமித்துவிட்டு,
அடுத்து எலும்பு மற்றும் நரம்பிற்கு ஊட்டம்
கொடுத்து இறுதியாக விந்து மற்றும்
நாதத்திற்கு வலு சேர்க்கிறது.

ஆக, செரிமான மண்டலம் தான் இரத்த
மண்டலம் முதல் ஜனன மண்டலம் வரை
சக்தியும் சத்தும் அளித்து நம் உடல்
நலனுக்கு உத்வேகத்தையும் உறுதியையும்
அளிக்கிறது. ஆக, நம் வயிறே நாம்
வாழ்வதற்குப் ஆதாரமாக விளங்குகிறது.

நாம் நம் வயிற்றை பாதுக்காகத்
தவறும்பட்சத்தில், நமது ஆரோக்கிய
வாழ்க்கையைப் பறிகொடுக்க
வேண்டியிருக்கும்.

இது நம்மில் அனேகம் பேருக்குத்
தெரிந்திருந்தும் நாம் வயிற்றுக்கு
முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதில்
நாக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து
வயிற்றைக் கெடுத்துக் கொள்கிறோம்.
நாக்கிற்கு அடிமையாகிறவர்கள் பல
நோய்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை
தொலைத்து விடுகிறார்கள்.

ஆக, நம் ஆரோக்கியத்தின் அடித்தளமாக
விளங்கும் வயிற்றைப் பாதுகாக்கும்
வாழ்வியல் நுட்பங்களை நான் தங்கள்
அனைவருக்கும் உணவாகப் பரிமாறுகின்றேன்,
தாங்கள் அனைவரும் அறிவு பூர்வமாக
உண்டு, உணர்வு பூர்வமாக செரித்து,
புத்துசாலிகளாக கிரகித்து ஆனந்தமாக
வாழுங்கள்.

#என்றும் #இளமை!
***************************
அன்பில் சிறந்த இனிய நண்பர்களே!
வருடங்கள் பல ஆனாலும் சின்ன வயதில்
பார்த்த மாதிரியே இருக்கீங்களே! என்று
உங்களை உங்கள் பால்ய நண்பர் கூற
வேண்டுமா?
உங்கள் தலை வழுக்கையையோ நரையையோ
பார்க்காமல் இருக்க வேண்டுமா ?
பத்தாவது படிக்கும் பையன் உங்களுக்கு
இருப்பது தெரியாமல், உங்களை பார்த்து, தம்பி!
உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்று
மற்றவர்கள் கேட்கச் சந்தோஷப்
படவேண்டுமா?

உங்கள் வளர்ந்த மகளைப் பார்த்து, ஆன்டி!
இவங்க உங்க சிஸ்டரா? என்று காது குளிர
கேட்க வேண்டுமா?
இதற்கெல்லாம் அருமையான மருந்து ஒன்று
இருக்கிறது.
அது, மரணத்தை தள்ளி வைக்கும் அருமருந்து
ஆகும்.

இந்த அருமருந்து ஒரு இரகசிய இடத்தில்
இருக்கிறது.
*********************************************
**********************************
அதைச் சொல்லுங்கள் முதலில் என்று
பரபரக்கும் இனிய நண்பர்களே!
அந்த இடம் வேறு எங்கும் இல்லை, நம்
மண்ணீரல் தான் அந்த இடம்.

இந்த பூமி பசுமை (இளமை) குன்றாமல்
இருக்க வேண்டுமானால் மண் வளம் கெடாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். அது போல,
இளமை (புதுமை) குன்றாமல் இருக்க
வேண்டுமானால் மண்ணீரல் கெடாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
அது பற்றி இங்கு பார்ப்போம்.

மரணம் என்பது உடல் முற்றிலுமாக தளர்ந்து
உயிரை தக்க வைத்து கொள்ள முடியாமல்
விட்டு விடுவதாகும்.

விரைவாக உடல் தளர்ச்சி அடையாமல்
பார்த்துக்கொள்ள வேண்டுமாயின் அதற்கு
சக்தி அளிக்கும் மண்ணீரலையும், ஊட்டம்
அளித்து பழுது பார்க்கும் கல்லீரலையும்
கையாளும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்.

மண்ணீரல் நமது உணவில் இருக்கும் மாவுச்
சத்தை செரித்து, கிரகித்து நமது உடலின்
சதைக்கும், சதையாக உள்ள எல்லா உள்
உறுப்புகளுக்கும் சக்தி அளிக்கிறது.
மண்ணீரல் சிறப்பாக செயல்பட
வேண்டுமாயின், பசி உணர்வோடு (வயிற்றில்
பசியின் வெப்பம் இருக்க) ஈரப் பதமான
முழுமையான (உயிர்ச் சத்துக்களை
உள்ளடைக்கிய) உணவினை எடுத்துக்கொள்ள
வேண்டும்.

பசி வயிற்றின் வெப்பமும், உணவின் ஈரமும்
சேர்வதால் உருவாகும் வெப்பமான புழுக்க
(Humidity) நிலையில் மண்ணீரல் சிறப்பாக
இயங்குகிறது. மேலும், மண்ணீரலுக்கு உந்து
சக்தியாக மெக்னீசிய தாது விளங்குகிறது.

மெக்னீசியம் பச்சை காய், கீரைகளில் அதிக
அளவில் இருக்கிறது. நாம் நம் உணவில் கீரை
வகைகளை எடுத்துக் கொள்ளவில்லை
என்றால், நம் சதைகளில் உள்ள மெக்னீசியம்
காலியாகத் தொடங்கும். இதனால், நம்
சதையும், சதையாக உள்ள உள்ளுறுப்புகளும்
தளர்ச்சியுற்று உடல் சோர்வு காண
ஆரம்பிக்கின்றன.

சதை தளர்ச்சியால் முதலில் பாதிக்கப்படுவது
நம் மண்ணீரல்தான். இதன் காரணமாக, நாக்கில்
வெண் படலம், உதடு மற்றும் வாயில் புண்,
பசியின்மையும், ஏன்தான் சாப்பிடுகிறோம்
என்ற வெறுப்புணர்வு, சாப்பிட்டவுடன்
சோர்வு, இரத்த சோகை, முடிவெடுப்பதில்
குழப்பம், ஆகியன அறிகுறிகளாகத் தோன்றும்.

மண்ணீரல் சோர்வடையும் போது,
உள்ளுறுப்புகள் யாவும் தளர ஆரம்பிக்கின்றன்.

அவற்றுள், வயிறு தளர்ந்தால் தொப்பையும்;
கல்லீரல் தளர்ந்தால் பித்தமும், நரையும், கண்
பார்வை குறைவும்; குடல் தளர்ந்தால்
பேதியும், குடல் இறக்கமும்; இருதயம்
தளர்ந்தால் இரத்த அழுத்த குறைவும் (Low
B.P.); நுரையீரல் தளர்ந்தால் மூச்சு
திணரலும், ஆஸ்துமாவும்; மூளை தளர்ந்தால்
புத்தி மந்தமும், ஞாபக மறதியும்; கணையம்
தளர்ந்தால் நீரழிவு நோயும்; சிறுநீரகம்
தளர்ந்தால் சிறுநீரக கற்கள், சிறுநீர்பை அழற்சி,
சிறுநீரகச் செயலிழப்பும்; கருப்பை தளர்ந்தால்
வெள்ளைப்படுதல், நீர் கட்டிகள், அடிக்கடி
மாதவிடாய், அதிக உதிர போக்கு, கரு
கலைதல், குறை பிரசவம் ஆகியவை
பிரதானமானவைகள்.

இதில் எந்த உள் உறுப்பு உங்கள் மரபுக்
கூறுப்படி பலவீனமாக இருக்கிறதோ அது
முதலில் தளர ஆரம்பிக்கிறது.
நண்பர்களே!
மண்ணீரலைப் பாதுகாக்க கற்றுக் கொள்வோம்.

பச்சை நிற காய், கீரைகள், முளைக்கட்டிய
தானியம் மற்றும் பருப்பு வகைகள், மிளகு,
வெந்தயம், சூப்பு வகைகள், கூழ் வகைகள்,
பழச் சாறுகள், வெல்லம், உலர்ந்த திராட்சை,
ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, கடலை
மிட்டாய், நெல்லிக்காய், எலுமிச்சை,
நார்த்தங்காய், கீழாநெல்லி ஆகியன
மண்ணீரலை பாதுகாக்கும்.

நொறுக்கு தீணிகள், எண்ணையில்
பொரித்தெடுத்த உணவுகள், மைதா, வெள்ளை
ரவை உணவுகள், துரித உணவுகள், வயிற்றின்
ஈரப்பதத்தை பதம் பார்க்கும் சிப்ஸ் வகைகள்,
வற்றல் வகைகள், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள்,
பச்சை மிளகாய், பதப்படுத்திய உணவுகள்,
இரசாயனம் கலந்த உணவுகள், இனிப்பு
அதிகமுள்ள அல்வா, குலோப்ஜாமூன்
ஆகியவைகள் மண்ணீரல் சக்தியை பாதிக்கும்
உணவுகளாகும்.
என்ன? நண்பர்களே!

இப்படி எல்லாம் வாயைக் கட்டி வயிற்றைக்
கட்டி இளமையைக் காக்க வேண்டுமா? என்று
நீங்கள் கேட்பது எனக்கு புரிகின்றது.
நண்பர்களே!
இளமை என்பது ஒரு தன்மைதான், ஆனால்
அந்த தன்மைக்கு கிடைக்கும் பரிசுகள் ஏராளம்.

இளமைத் தன்மையோடு இருந்தால் நோயற்ற
தன்மை, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள்,
எப்போதும் அன்பான, அமைதியான,
ஆனந்தமான, அழகான, நிம்மதியான வாழ்க்கை
ஆகியன பரிசுகளாகக் கிடைக்கும். இப்போது
சொல்லுங்கள், இளமையாய் இருக்க
விருப்பம்தானே?.

சரி நண்பர்களே! இளமையின் ஊற்றுக்கண்ணாக
இருக்கும் மண்ணீரலைப் பாதுகாக்க
தேவைப்படும் சத்தும் சக்தியும் பற்றி இனி
பார்ப்போம்.

சமச்சீர் புரதம்
----------------------
மண்ணீரல் செரிமாணத்திற்கு வேண்டிய
நொதிகளை உருவாக்கத் தேவையான
அத்தியாவசிய அமினஅமிலங்கள்
அனைத்தையும் கொண்டுள்ளது.

பி-உயிர்ச் சத்துக்கள்
-------------------------------
மண்ணீரல் செரிமாண நொதிகளை தரமாக
வேலை வாங்க பி-உயிர்ச் சத்துக்கள் (B-
vitamins) அவசியம் தேவைப்படுகிறது.

மெக்னீசிய தாதுச் சத்து
-------------------------------------
மெக்னீசிய தாது சதையாக உள்ள நம்
மண்ணீரலைத் தூண்டி உணவின் தரம் அறிந்து
நொதிகளைச் சுரக்கச் செய்ய உதவுகிறது.

காய்-கனிகளின் செரிவு
-----------------------------------
நம் உணவின் தன்மைக்கு ஏற்றவாறு சில
உபகாரணிகள் (Co-factors) தேவைப்படுகின்றன
. அது எது என்று குறிப்பறிந்து எடுத்துக்
கொள்ள முடியாது ஆகையால், அனைத்து
விதமான உபகாரணிகளையும் கொண்டுள்ள
காய்-கனிகளின் செரிவுச் சத்து (Concentrated
Fruits and Vegetables) உதவும்.

நீரில் கரையும் நார்ச் சத்து
---------------------------------------
மலச்சிக்கல் காரணமாக உடல் உஷ்ணமாகி,
உடலின் நீர்ச் சத்தை காலியாக்கிவிடுவதால்,
மண்ணீரல் செயல்பாடு பாதிக்கப்படும். நீரில்
கரையக்கூடிய இயற்கையான நார்ச் சத்தானது
மலச்சிக்கலை போக்கி, நீரில் கரையக்கூடிய
கசடுகளை நீக்கும் தன்மை வாய்ந்தது.

ஒமேகா-3 கொழுப்பு
--------------------------------
மண்ணீரல் தளர்ச்சியால் கசடுகள் தேங்கி
அழுத்தமாகிவிடுகிறது. ஒமேகா-3
கொழுப்பானது கொழுப்பில் கரையக்கூடிய
கசடுகளை நீக்கி மண்ணீரலை இலகுவாக்கி
பாதுகாக்கிறது. அதேபோல், மண்ணீரலுக்கும்
மூலைக்கும் உள்ள நரம்புத் தொடர்பை
வலிமையாக்கி சிறப்பாக செயல்பட
வைக்கிறது.

மண்ணீரலுக்கு மலர் மருந்துகள்:
*************************************************
மனக்கவலை மற்றும் மனச் சோர்வால்
மண்ணீரல் அழற்சி - ஜென்சியன் (Gentian)
கோபம், எரிச்சல் மற்றும் உடல் உஷ்ணத்தால்
மண்ணீரல் சோர்வு - செர்ரி பிளம்(Cherry Plum)
திடீர் வெப்ப நிலை மாற்றத்தால் மண்ணீரல்
திணறுதல் - வால்நட் (Walnut)
மண்ணீரல் அழற்சியால் ஏற்படும் உடல்
தளர்வுக்கு - சென்டாரி (Centuary)

குறிப்பு:-
-------------
நண்பர்களே!
இந்த மலர் மருந்துகளை அனைத்து
ஹோமியோபதி மருந்து கடைகளிலும்
வாங்கலாம். தங்களது தேவைக்கு
மருந்துகளை வாங்கும் பொழுது ஒரு சிறிய
புட்டியில் சர்க்கரை உருண்டைகளில் ஊற்றி
கொடுக்கும்படி கேட்டு வாங்குங்கள்.
அதாவது ஒன் டிராம் பில்ஸ் (One Dram Pills)
என கேட்டு வாங்கி தினமும் ஒரு வேளை 5
உருண்டைகளாக இரவில் சாப்பிட்டுவரவும்.

இளமையை வரவேற்போம்! இன்பமாய்
வாழ்வோம்!.

தொடரும்...........
******************************************

பகுதி – 2
-------------

நீடூழி வாழ்வோம்
**************************
என்றும் இளமை உணர்வோடு இருக்கும் இனிய
நண்பர்களே!
நீடூழி வாழ வேண்டுமா?
.
அட! போங்க சார்! இந்தக் கடுமையான
வாழ்கையை இன்னும் நிறைய நாட்களுக்கு
வாழ வேண்டுமா, ஆளை விடுங்க சாமி
என்கிறீர்களா?
அன்பு நண்பர்களே !

மண்ணீரலைப் பாதுகாத்து இளமையாக வாழும்
போது, நல்ல உடல் நலத்தால் நமக்கு உள்ளே
பிரச்சனைகள் குறைவாகவும், தெளிந்த
அறிவின் பயனாய் நமக்கு வெளியே
பிரச்சனைகளைத் தரமாக கையாள்வதாலும்,
வாழ்கை என்பது சுலபமான ஒன்றாக
அமையும் ஆதலால், நீடூழி வாழ்தல் என்பது
சுமையாக இல்லாமல் சுகமானதாகவே
இருக்கும்.

சரி, நாம் நீடூழி வாழ ஒரு அற்புத விருக்க்ஷம்
ஒன்று இருக்கிறது.
இந்த விருக்சஷம், நம் உடலில் கல்லீரலாக
இருக்கிறது.
வான் பொழிந்து பூமி தனிய வேண்டுமாயின்,
மண்ணை வளமாக்கி மரம் செழிக்க வேண்டும்.
அது போல, வான் சக்தி (Cosmic) உட் புகுந்து
உடல் தனிய வேண்டுமாயின் மண்ணீரலை
வளமாக்கி, கல்லீரலை செழிப்படைய செய்ய
வேண்டும். அது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

கல்லீரல் என்பதை ஆங்கிலத்தில் லிவர் (Liver)
என்று அழைப்பதன் அர்த்தமே அது நம்மை
வாழ வைக்கிறது என்பதால்தான்.
ஆகவே, கல்லீரல்தான் நம் உயிர் என்பதை
எப்பொழுதும் மறந்து விட கூடாது.

மண்ணீரல் நமது உணவில் இருக்கும் மாவுச்
சத்தைச் செரித்து, கிரகித்து கனிசமான
சக்தியை கல்லீரலுக்கு அளிக்கிறது.
கல்லீரலானது உணவில் உள்ள புரதம் மற்றும்
கொழுப்புச் சத்தைச் செரித்து உடலுக்கு
வலுவையும் உறுதியையும் அளிக்கிறது.

கல்லீரல் சிறப்பாக செயல்பட வேண்டுமாயின்,
வயிற்றில் பசி வெப்பம் தனிய வேண்டும்;
மண்ணீரல் செரிமானம் முழுமை பெற்றிருக்க
வேண்டும்; முழுமையான (உயிர்ச் சத்துக்களை
உள்ளடக்கிய) உணவினை எடுத்துக் கொள்ள
வேண்டும் மற்றும், கால்சியம் தாதுச் சத்தை
எடுத்து கொள்ள வேண்டும்.

அதிக அமிலத் தூண்டலைத் தரும் மசாலா
உணவுகளையோ (பிரியாணி, நூடுல்ஸ்,
பலவிதமான துரித உணவுகள் ஆகியன)
அல்லது அமிலத் தன்மை உள்ள
உணவுகளையோ (பச்சை மிளகாய், குளிர்
பானங்கள், காபி, மது பானங்கள், சிக்கன் 65,
மஞ்சூரியன் வகைகள், வெங்காயச் சட்னி,
பதப்படுத்திய ஊறுகாய் ஆகியன), இரசயன
மருந்துகள் ஆகியன எடுத்துக் கொண்டால்
வயிற்றில் வெப்பம் அதிகமாகும்.
இந்த அதிக வெப்பத்தில் கல்லீரல் சுரக்கும்
பித்த நொதிகள் கரைந்து வீணாகிவிடும்.

இப்படி வீணாவதால் மூளையானது
உணவினை செரிக்கக் கல்லீரலை மீண்டும்
மீண்டும் தூண்டி பித்த நீரை அதிக அளவில்
சுரக்கச் செய்கிறது. காலப்போக்கில் கல்லீரல்
சோர்வடைகிறது.
அதிக பித்தம் சுரக்க அதிக கால்சியம்
தேவைப்படுவதால், எலும்பு கரைகிறது.

கரைதல் ஆயுளைக் குறைக்கிறது.
காலப்போக்கில் கல்லீரல் சோர்வடைகிறது.
அதிகப் பித்தச் சுரப்பானது உஷ்ண வியாதிக்
கிருமிகள் (மஞ்சள் காமாலை, டைபாய்டு,
அல்சர் முதலியன) பெருக காரணமாகிறது.

அதிகப்படியான பித்தத்தை சிறுநீரகங்கள்
வெளியேற்றத் தவறும் போது பித்தப்பை
கற்கள் உருவாகின்றன. நரை ஏற்படுகின்றன.
உடல் உஷ்ணத்தால் நமது உள் உறுப்புகள்
இரணவீக்கம் (Inflammation) ஆகின்றன.

அவற்றுள், வயிற்று இரணம் அல்சரையும்;
சிறு குடல் இரணம் அம்மையையும்;
பெருங்குடல் இரணம் மூலத்தையும்; இருதய
இரணம் இரத்த அழுத்தம் (B.P.) மற்றும்
மாரடைப்பையும்; நுரையீரல் இரணம்
நெஞ்செரிச்சல் மற்றும் சளியையும்; மூளை
இரணம் மன உளைச்சலையும்; கணைய
இரணம் நீரழிவு நோயையும்; சிறுநீரக இரணம்
சிறுநீரக செயலிழப்பையும்; சிறுநீர்பை
இரணம் சிறுநீரகத் தொற்றையும்; கருப்பை
இரணம் எரிச்சலான மாதவிடாய், அதிக உதிரப்
போக்கு மற்றும் கருப்பை புற்று,
ஆகியவற்றையும் உண்டாக்குகின்றன. இதில்
எந்த உள் உறுப்பு உங்கள் மரபுக் கூறுப்படி
பலவீணமாக இருக்கிறதோ அது முதலில்
இரணப்படுகிறது.

நண்பர்களே!
கல்லீரலைப் பாதுகாக்க புளிப்பையும்
உப்பையும் கண்டிப்பாக குறைத்துக் கொள்ள
வேண்டும். கசப்பையும் துவர்ப்பையும்
அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மிளகு, வெந்தையம், கூழ் வகைகள், பழச்
சாறுகள், வெல்லம், உலர்ந்த திராட்சை, ஆறு
மணி நேரம் ஊறிய நிலக்கடலை, கடலை
மிட்டாய், நெல்லிக்காய், நார்த்தங்காய்,
கீழாநெல்லி ஆகியன கல்லீரலை பாதுகாக்கும்.
நொறுக்கு தீணிகள், எண்ணையில் பொரித்து
எடுத்த உணவுகள், துரித உணவுகள்,
பனிக்கூழ் (Ice cream), குளிர் பானங்கள், பச்சை
மிளகாய், பதப்படுத்திய உணவுகள்,
இரசாயணம் கலந்த உணவுகள் ஆகியன
கல்லீரல் சக்தியை கெடுக்கும்.
என்ன நண்பர்களே!

இப்படி எல்லாம் வாயைக் கட்டி வயிற்றைக்
கட்டி ஆயுளை நீட்டிக்க வேண்டுமா? என்று
நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.
நண்பர்களே!
கல்லீரல் சுகம் என்ற தன்மைக்கு கிடைக்கும்
பரிசுகள் ஏராளம்.

எவரோடும் இணக்கமாகப் பழகுவது,
இனிமையாகப் பேசுவது, நோயற்று இருப்பது,
புத்தி நிதானம், நீள் ஆயுள், எப்போதும்
அன்பாக, அமைதியாக, ஆனந்தமாக, அழகாக,
நிம்மதியாக வாழ்வது ஆகிய பரிசுகள்
கிடைக்கும்.

என்ன நண்பர்களே! கல்லீரலைப் பாதுகாக்க
முடிவு செய்துவிட்டீர்கள்தானே?
சரி நண்பர்களே!
நீள் ஆயுளின் ஊற்றுக்கண்ணாக விளங்கும்
கல்லீரலைப் பாதுகாக்க தேவைப்படும் சத்தும்
சக்தியும் பற்றி இனி பார்ப்போம்.

சமச்சீர் புரதம்
---------------------
கல்லீரல் செரிமாண நொதிகளை உருவாக்கத்
தேவையான எல்லா அத்தியாவசிய அமினோ
அமிலங்களைக் கொண்டுள்ளது.

பி-உயிர்ச் சத்துக்கள்
-------------------------------
கல்லீரல் செரிமாண நொதிகளை தரமாக
வேலை வாங்க பி-உயிர்ச் சத்துக்கள் (B-
vitamins) அவசியம் தேவைப்படுகிறது.

கால்சிய தாதுச் சத்து
--------------------------------
கால்சிய தாது கல்லீரலின் பித்தம் தரமாக
உருவாக தேவைப்படுகிறது..

ஒமேகா-3 கொழுப்பு
------------------------------
நீரில் கரையும் நார்ச் சத்து காய்-கனிகளின்
செரிவு
தரமான பித்த நீர் சுரக்க ஒமேகா-3 கொழுப்பு
மிக அவசியம்.

அதிகப்படியான பித்தமும், கெட்டக் கொழுப்பும்
சேர்ந்துதான் பித்தக் கல். நல்லக் கொழுப்பாகிய
ஒமேகா-3 எடுத்துக் கொள்ளும் போது கெட்டக்
கொழுப்பு நீக்கப்படுவதால், பித்தக் கல்
பிரச்சனையை தவிர்க்க முடியும்.

மலச்சிக்கல் காரணமாக உடல் உஷ்ணமாகி,
கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. நீரில்
கரையக்கூடிய இயற்கையான நார்ச் சத்தானது
மலச்சிக்கலை போக்கி,உடல் உஷ்ணத்தை
தனித்து கல்லீரலை சிறப்பாக செயல்பட
வைக்கிறது.

உணவின் கொழுப்பு செரிக்க அதன் தன்மைக்கு
ஏற்றவாறு சில உபகாரணிகள் (Co-factors)
தேவைப்படுகின்றன.
அவை எவை என குறிப்பறிந்து எடுத்துக்
கொள்ள முடியாது ஆகையால், உபகாரணிகள்
பல கொண்டுள்ள காய்-கனிச் செரிவு
(Concentrated Fruits and Vegetables) உதவும்.

கல்லீரலுக்கு மலர் மருந்து:
****************************************
கோபம், எரிச்சல் மற்றும் உடல் உஷ்ணத்தால்
ஏற்படும் கல்லீரல் அழற்சி - செர்ரி பிளம்
(Cherry Plum)
தூக்கமின்மையால் உண்டாகும் கல்லீரல்
சேதாரம் - வைட் செஸ்நட் (White Chestnut)
குடிப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரல் -
வால்நட் (Walnut)
பித்தக் கல் வராமல் தடுக்கவும், பித்தக்
கல்லைக் கரைக்கவும் - ராக் ரோஸ் (Rock
Rose)
மன அழுத்தத்தால் உண்டான கல்லீரல் அழற்சி
நீங்க - அக்ரிமோனி (Agrimony)

குறிப்பு:-
-------------
நண்பர்களே இந்த மலர் மருந்துகளை
அனைத்து ஹோமியோபதி மருந்து
கடைகளிலும் வாங்கலாம். தங்களது
தேவைக்கு மருந்துகளை வாங்கும் பொழுது
ஒரு சிறிய புட்டியில் சர்க்கரை
உருண்டைகளில் ஊற்றி கொடுக்கும்படி கேட்டு
வாங்குங்கள். அதாவது ஒன் டிராம் பில்ஸ்
(One Dram Pills) என கேட்டு வாங்கி தினமும்
ஒரு வேளை 5 உருண்டைகளாக இரவில்
சாப்பிட்டுவரவும்.

கல்லீரலை குளிர்வித்து வாழவைத்தால்,
கல்லீரல் நம்மை நீடூழி வாழவைக்கும்.

அல்சரா? பசியா?
**************************
நாம் உண்ணும் உணவு இரைப்பையில் நாலு
மணி நேரம் செரித்து (Digestion), இரசமாகி
(Juice), பின் சிறு குடலை அடைகிறது. இங்கு
இந்த இரசம், 21 அடி சிறு குடலின் உறிஞ்சிகள்
மூலம் இரத்தத்தில் சேர்கிறது (Assimilation).
பின்னர், இது பெருங்குடலைக் கடக்கும்
போதும் மிச்சம் மீதி உள்ள தாதுக்களை
எடுத்துக் கொண்டபின், மலக்குடல் (Rectum)
வழியாக நம் உடலை விட்டு
வெளியேறுகிறது.

இப்படிச் செரிமாணம் நிகழ்ந்தால் உடலுக்கு
சத்தும் சக்தியும் கிடைத்து மலச்சிக்கல்
இன்றியும் அமைகிறது. அதே சமயம்,
உணவின் தன்மையும் உடல் தன்மையும்
மாறுபடும் நிலையில், உணவு இரைப்பையில்
செரிப்பதற்கு பதில் நொதிக்க ஆரம்பித்து
(Fermentation), நான்கு மணி நேரத்தில்
இரசமாவதற்கு பதில் புளித்து நுரைத்த
அமிலமாகி (Alcohol), இரைப்பை முதல் மலக்
குடல் வரை எரிச்சலையும் இரணத்தையும்,
சிறு மற்றும் பெருங்குடல்களில்
மலச்சிக்கலையும் ஏற்படுத்தி, பின்னர் நொந்த
மலமாக வெளி வருகிறது.
நம்மைப் பொறுத்த வரை உள்ளே சென்ற
உணவு வெளியே மலமாக வந்து விடுகிறது.

நான்கு மணி நேரம் உணவு செரித்த பின்
இரசமாக இரைப்பையை விட்டு சிறு
குடலுக்கு வந்தடையும் போது பசி உணர்வு
ஏற்படுகிறது.
அதுவே, நான்கு மணி நேரத்தில் உணவு
செரிப்பதற்கு பதில், நொந்து அமிலமாவதால்
உண்டாகும் வயிற்று எரிச்சலும் பசி போல்
தோன்றும். இது தொடர்ந்து நிகழுமானால்
அல்சர் வந்துவிடும்.

நமக்கு வந்திருப்பது பசியா? அல்லது
அல்சரா? என்று புரிந்து கொள்வது
நல்லதுதானே ? அது பற்றி இனி பார்ப்போம்.
பசியா? அல்சரா? எவ்வாறு அறிவது?

பசியினால் வரும் உணர்வுகள்
---------------------------------------------
--
பசி நேரத்திற்கு முன் பசி எடுக்காது.
பசி நேரம் பசி தாங்கும் தன்மையில் இருக்கும்.
வெலவெலத்து போக மாட்டோம்.
சாப்பிடும் போது சாப்பிடச் சாப்பிட பசி
படிப்படியாக அடங்கும். பசி முழுமையாக
அடங்கியதும் முதல் ஏப்பம் வரும்.
உணவை விரும்பிச் சாப்பிடுவோம்.
சாப்பிட்ட உடன் புத்துணர்வு உண்டாகும்.
சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து
உழைப்பதற்குச் சக்தியும், வலிமையும்,
தெளிவும் கிடைக்கும்.

அல்சரினால் வரும் உணர்வுகள்
---------------------------------------------
---
பசி நேரத்திற்கு முன்னரே பசி எடுப்பது போல்
மிதமான எரிச்சல் இருக்கும்.
பசி நேரத்தில், பசி தாங்க முடியாமல்
அகோரப்பசி போல் எரிச்சல் இருக்கும்.
சாப்பிடச் சாப்பிட வயிற்றைப் பிரட்டும். பசி
அடங்கியதாக தோன்றாது. சாப்பிடும் போதே
இடை இடையே ஏப்பம் வரும்.
உணவு மீதும், சமைத்தவர் மீதும் எரிச்சல்
வரும்.
சாப்பிட்ட உடன் அசதியால் கொஞ்சம்
படுத்துக்கொள்ளலாம் என எண்ணுவோம்.

சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து கல்லைப்
போட்டது போல் இருக்கும். சோர்வும்,
பலகீனமும் இருக்கும்.

அன்பு நண்பர்களே!,
பசித் தன்மைக்கும் அல்சர் புண் எரிச்சலுக்கும்
வித்தியாசம் உணரத் தெரிந்தால் அல்சரை
தொடக்க நிலையிலேயே குணப்படுத்தி
விடலாம்.

ஆம் நண்பர்களே!,
அல்சர் தன்மை அதிகமாகும் போது
வாய்ப்புண்ணும், உதட்டுப்புண்ணும்
தோன்றும், மலச்சிக்கல் தீவிரமாகும்,
மண்ணீரல் செரிமாணம் கெட்டிருந்தால் மலம்
வெளுப்பாக இருக்கும். கல்லீரல்
கெட்டிருந்தால் மலம் கருமை கூடும். இதில்
பித்தம் அதிகமிருந்தால் மலம் கரு
மஞ்சளாகவும், உஷ்ணம் அதிகமிருந்தால் மலம்
சிவந்தும், கரும்பித்தம் அதிகமிருந்தால் மலம்
கருப்பாகவும் , அல்சர் இரணம் அதிகமிருந்தால்
மலம் கருஞ்சிவப்பாகவும் இருக்கும்.
அல்சரின் தீவிரம் அதிகமானால், மண்ணீரல்
இரணத்தால் டைபாய்டும் (குடலம்மை),
கல்லீரல் இரணத்தால் மஞ்சள் காமாலையும்
ஏற்பட நேரிடும்.

அல்சரை குணமாக்க ஆங்கில மருத்துவம்
இரண்டு தவறான செயல்களை செய்கிறது.

1. அல்சர் புண்ணுக்கான கிருமியைக் கொல்ல
கிருமிநாசினி (Antibiotic) மற்றும் வலி
நிவாரணி (Pain killer) கொடுக்கிறார்கள் (இது
நரம்பை பதம் பார்க்கிறது. இதனால், மூளை
அல்சரை குணப்படுத்த முணைவது
குறைகிறது).

2. இவர்கள் கொடுக்கும் இரசாயண மருந்தின்
அமிலத் தன்மை அல்சர் புண்ணைப் பதம்
பார்க்காமல் இருக்க ஜெலுசில் (Aluminum
Hydroxide) மாத்திரை அல்லது திரவம்
(Antacid) கொடுக்கிறார்கள் (இது அல்சர்
புண்ணைப் பூசி மொழுகுகிறது. இதனால்,
கண்டதையும் சாப்பிட்டு வயிறுப் புண்
மேலும் இரணமாவது தெரியாது இருக்கும்).

ஆக, வயிற்று அல்சர் மேலும் தீவிரம்
அடைந்து பல காலம் கடந்து, இரைப்பை
அல்லது குடல் புற்று நோய்க்கு இட்டுச்
செல்கிறது.
வேண்டாமே இந்த விபரீத மருந்து
விளையாட்டு.

அல்சரை குணமாக்கும் இரகசியம் தெரிய
வேண்டுமா?.
இந்த விளக்கத்தை சற்று கவனியுங்கள்.

உங்கள் வீட்டுச் சுவரின் ஒரு பகுதி உப்புத்
தன்மையால் அரித்து செரித்து இருப்பதாக
வைத்துக் கொள்வோம். இந்த வீணான சுவர்ப்
பகுதியை இடித்து எடுத்து விட்டு, புது
செங்கற்களைக் கொண்டு சரி செய்து,
சிமெண்ட் பூசி, பெயிண்ட் அடிப்பதற்கு
பதிலாக, ஒரு அழகான போஸ்ட்டரை கொண்டு
வந்து அந்த செரித்துப் போன சுவற்றுப்
பகுதியின் மீது ஒட்டி விடுவோமா?
சுவர் வீணாவது தெரியாமல் இருந்தால்
போதும், சுவர் எப்படி ஆனால் நமக்கு என்ன
என்றா இருப்போம்?

இது போலவே, நம் வயிற்றுச் சுவர் அல்சரால்
அரித்திருந்தால், அதனை முற்றிலும்
குணமாக்க வழி காண்போமா?
அல்லது,
ஆன்டாசிட் கூழ் கொண்டு அதாவது ஜெலுசில்
(Aluminum Hydroxide) மாத்திரை கொண்டு
அவ்வப்போது பூசி மழுப்புவோமா?.
முடிவு உங்கள் கையில்!.

சிறுகுடலும், பெருங்குடலும்
********************************************
நாம் உண்ட உணவு செரிக்கும் களமாக
இரைப்பையும் (Stomach), செரிமானத்திற்கு
வேண்டிய நொதிகள் மற்றும் ஆக்க சக்திக்கு
உறுதுணையாக மண்ணீரல் (Spleen) மற்றும்
கல்லீரல் (Liver) செயல் படுகின்றன.

இதன் பயனாய், நான்கு மணி நேரம் உணவு
செரித்து (Digestion), இரசமாகி (Juice), பின் 21
அடி சிறு குடலை அடைகிறது. இங்கு இந்த
இரசம், சிறு குடலின் உறிஞ்சிகள் (Villi) மூலம்
இரத்தத்தில் சேர்கிறது (Assimilation). பின்னர்,
இது பெருங் குடலைக் கடக்கும் போதும் மிச்ச
மீதி உள்ள தாதுக்களை எடுத்துக் கொண்டபின்,
மலக்குடல் (Rectum) வழியாக நம்
உடலிலிருந்து மலமாக வெளியேறுகிறது.

அன்பு நண்பர்களே! நம் ஆரோக்கிய வாழ்வில்
சிறுகுடல் மற்றும் பெருங்குடலின் பங்கு பற்றி
இப்பொழுது பார்ப்போம்.

சிறுகுடல்
---------------
---------------
எஞ்சிய கொழுப்பு மற்றும் புரதச் செரிமானம்
நிகழ செரிமானத்தில் பங்கு கொள்கின்றது.

முழுமையாக செரித்த சத்துக்களை சிறு
குடலின் உறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்பட்டு
இரத்தத்தில் சேர்கிறது.

சிறுகுடல் என்பது நெருப்புச் சக்தி:
---------------------------------------------
-----
செரிக்காத உணவால் உடலுக்கு சக்தி
குறைவதால், சிறுகுடலில் உணவு தேக்கமாகி,
நொதிப்பதால் (Fermentation), உண்டாகும்
எரிசாராய (Ethanol) அமிலம் சிறுகுடலை
உஷ்ணமாக்கி விடுகிறது.

இருதயம்:
---------------
சிறுகுடல் போல் இருதயமும் நெருப்பு
உறுப்பாகும். சிறுகுடலில் சேரும்
வெப்பமானது இருதயத்தை இரணப்படுத்தி
வேகப்படுத்தும். சிறுகுடல் உஷ்ணத்தை
தனித்தால், இருதய நோய்ச் சிக்கல்கள் தீரும்.

சிறுகுடல் சக்தி குறைவால் ஏற்படும்
நோய்கள்
---------------------------------------------
------------------------
இருதய நோய்கள், சிறுகுடல் அல்சரும் அது
வளர்ந்து குடல் புற்றும், உடல் வெப்ப
நோய்களான தொண்டை அழற்சி,
நெஞ்செரிச்சல், குடலம்மை (Typhoid),
சின்னம்மை (Chicken Pox), மஞ்சள் காமாலை
(Jaundice) மற்றும் வேணல் கட்டிகள் (Skin
inflammation) ஆகியவை உண்டாகின்றன.

பெருங்குடல்
-------------------
-------------------
நார்ச் சத்தின் உட்ப்பிரிவுகளில் (Cellulose,
Pectin, Hemicelluloses, etc.,) உள்ள சில
தாவரச் சத்துக்கள் (Phytofactors)
செரிக்கப்படுகிறன.
உடலுக்குத் தேவையான மிச்சம் மீதி உள்ள
தாதுச் சத்துக்களை கிரகித்துக்கொள்ள
பெருங்குடல் உதவுகிறது

பெருங்குடல் என்பது காற்று சக்தி:
---------------------------------------------
-----
செரிமானக் கோளாறால் சிறுகுடலில்
நொதித்து உருவான எரிசாராய அமிலம்,
பெருங்குடலை வந்து சேரும்போது புளித்து,
நுரைக்க ஆரம்பிக்கிறது. நுரை என்பது நீரும்
காற்றும் சேர்ந்ததுதான். ஆக பெருங்குடலில்
காற்று (வாய்வு) சேர்கிறது.

நுரையீரல்:
-----------------
பெருங்குடலில் உண்டாகும் வாய்வுக்
காற்றானது, நுரையீரல் காற்றைக் கெடுக்கும்.
மூச்சுத் திணறல், சளி, இருமல், மூச்சிறைப்பு
உள்ளிட்ட சுவாசப்பை கோளாறுகள்
யாவைக்கும் பெருங்குடலின் வாய்வும்
மலச்சிக்கல்தான் காரணம்.

பெருங்குடல் சக்தி குறைவால் ஏற்படும்
நோய்கள்
---------------------------------------------
-----------------------------
நுரையீரல் நோய்களான சளி, இருமல்,
ஆஸ்துமா, அலர்ஜி, ஒவ்வாமை; வாய்வு
நோய்களான வாய்வுப் பிடிப்பு, முடக்கு
வாதம் (Rheumatoid Arthritis), வாதம்
(Paralysis), இழுப்பு (Epilepsies), மூளைப்
பக்கவாதம் (Stroke) மூளைச் செயலிழப்பு
(Coma) மற்றும் மலக்குடல் நோய்களான
குடலிரக்கம் (Hernia) மற்றும் மூலம் (Piles)
ஆகியன.

அன்பு நண்பர்களே!
உங்கள் உடல் ஆரோக்கியம், குடல்
ஆரோக்கியத்தில் இருக்கிறது என்பது நன்கு
புரிகின்றது அல்லவா?.

செரிமான சக்தி (Digestion) நன்கு அமையப்
பெற்றிருந்தும், செரித்த சத்து இரசத்தை
உரிஞ்சிக் கொள்ளும் திறன் (Assimilation)
என்பது, குடல் சுத்தத்தைச் சார்ந்து
இருக்கிறது.

குடல் சுத்தமானது, உணவில் சத்து போக,
கழிவு மீதம் எவ்வளவு இருக்கிறது
என்பதனால் முடிவு செய்யப்படுகிறது.

நாம் உண்ணும் உணவில் சத்துப் பகுதி
குறைவாகவும், கழிவுப் பகுதி மிகுதியாகவும்
இருக்குமானால் உடலுக்கு சக்தி குறைவாக
கிடைக்கும், ஆனால் வெளியேற்ற வேண்டிய
கழிவுக்கு சக்தி அதிகம் தேவைப்படும்.
இதனால், கழிவு தேக்கம் ஏற்பட ஆரம்பிக்கிறது.

இதன் பயனாய், மேலே குறிப்பிட்ட
நோய்களுக்கு வழி ஏற்படுகிறது.
நண்பர்களே! குடல் ஆரோக்கியத்தை காக்கும்
இரகசியங்களை இனி பார்ப்போம்.

குடல் ஆரோக்கியத்திற்கு மலர் மருந்து:
---------------------------------------------
--------------
குடல் வெப்பம் தணிய, குடல் புண்
ஆற,அம்மை காய்ச்சல் மற்றும் மூலம் - செர்ரி
பிளம் (Cherry Plum)
மலச்சிக்கலால் தூக்கமின்மை, பாம்புக் கனவு
- வைட் செஸ்நட் (White Chestnut)
துர்வாடை அடிக்கும் வாய்வு, வாய் துர்
நாற்றம் - கிராப் ஆப்பிள் (Crab Apple)
வயிற்று (குடல்) உப்புசம், டைபாய்டு மற்றும்
மஞ்சள் காமாலை - ராக் ரோஸ் (Rock Rose)
வயிற்றுப் போக்கு, பேதி, மற்றும் சீத பேதி -
ரெஸ்கியூ ரெமிடி(Rescue Remedy)

குறிப்பு:-
--------------
நண்பர்களே!
இந்த மலர் மருந்துகளை அனைத்து
ஹோமியோபதி மருந்து கடைகளிலும்
வாங்கலாம். தங்களது தேவைக்கு
மருந்துகளை வாங்கும் பொழுது ஒரு சிறிய
புட்டியில் சர்க்கரை உருண்டைகளில் ஊற்றி
கொடுக்கும்படி கேட்டு வாங்குங்கள்.

அதாவது ஒன் டிராம் பில்ஸ் (One Dram Pills)
என கேட்டு வாங்கி தினமும் ஒரு வேளை 5
உருண்டைகளாக இரவில் சாப்பிட்டுவரவும்.

சிறுகுடல் வெப்பத்தினை தணிப்போம்! இதய
நோய் வராமல் தவிர்ப்போம்!
பெருங்குடல் வாய்வு நீக்குவோம்! சுவாச
நோயை அழிப்போம்!

தொடரும்...........